போதைப்பொருள் கடத்தல்: 12 பேருக்கு விளக்கமறியல்

போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 12 உத்தியோகத்தர்களுக்கு 21 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 08-07-2020 | 7:03 PM
Colombo (News 1st) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் 12 உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவின் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ராகம பகுதியில் கைது செய்யப்பட்ட 13 ஆவது சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் தினேஸ் நிர்மல என்பவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய பிரதம நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களில் சிலர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி, அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட போதைப்பொருளை தங்களின் வீடுகளிலும் சொகுசு வாகனங்களிலும் மிக சூட்சுமமாக மறைத்து வைத்து விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் அறிவித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கு மேலதிகமாக சட்டவிரோதமாக துப்பாக்கிகளையும் விற்பனை செய்துள்ளதாகவும், விசாரணைகள் மூலம் துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சார்பில் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

ஏனைய செய்திகள்