ரவி உள்ளிட்ட எழுவருக்கு எதிரான பிடியாணைக்கு தடை

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட எழுவருக்கு எதிரான பிடியாணைக்கு இடைக்காலத் தடை

by Staff Writer 07-07-2020 | 7:02 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரை கைது செய்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிடியாணையை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதின்றம் இன்று விடுத்தது. ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள், பிடியாணை உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்கக்கோரி தாக்கல் செய்திருந்த ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து பிடியாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.பீ. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோபித ராஜகருணா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மத்திய வங்கியின் இரண்டு பிணை முறிகள் ஏலத்தின் போது 51.98 பில்லியன் ரூபா நிதியை தவறான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்யுமாறு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. பிடியாணைக்கு இடைக்கால தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிறப்பித்தாலும், அது பிணைமுறிகள் மோசடி தொடர்பான விசாரணைக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்கக்கூடாது என மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தெரிவித்தது. குற்றப்புலானாய்வுத் திணைக்களத்தால் அழைப்பு விடுக்கப்படும் எந்தவொரு தருணத்திலும் சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏனைய செய்திகள்