பேசாலையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது: மன நலம் குன்றியோருக்கான சிகிச்சை வழங்குமாறு உத்தரவு

by Staff Writer 07-07-2020 | 5:43 PM
Colombo (News 1st) மன்னார்  - பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் பேசாலை பொலிஸாரினால் மன்னார் மாவட்ட நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார். கடந்த சனிக்கிழமை (04) பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டு, பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். குறித்த நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை வவுனியா சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில், வவுனியா வைத்தியசாலையில் மன நலம் குன்றியோருக்கான சிகிச்சை நிலையத்தில் அனுமதித்து சிகிச்சை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இவரின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் தொடர்பாக புனித வெற்றிநாயகி ஆலய பங்குத்தந்தை, மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆகியோர் வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸார் CCTV காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில், யாழ். புனித மரியன்னை பேராலய வளாகத்தில் நேற்று பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டவர் மனநலம் குன்றியவர் எனவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். சந்தேகநபரிடமிருந்த பொதியில் பழைய ஆடைகளே இருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

ஏனைய செய்திகள்