சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை

சிரேஷ்ட பிரஜைகளுக்கான வைப்புகளின் வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை

by Staff Writer 07-07-2020 | 1:16 PM
Colombo (News 1st) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என நிதி, பொருளாதார கொள்கை அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை அமுலில் இருந்த வட்டி வீதம் அவ்வாறே தொடர்ந்தும் பேணப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பிரஜைகளுக்கான வைப்புகளுக்கு வழங்கப்பட்ட வட்டி வீதத்தை திருத்துவதற்கோ, வருமான வரி சலுகையில் திருத்தங்களை மேற்கொள்ளவோ அரசாங்கத்தால் எவ்வித தீர்மானங்களும் முன்னெடுக்கப்படவில்லை என அறிக்கை ஒன்றினூடாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர், ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் வங்கிகளுக்கான வரியாக அறவிடப்பட்ட வரியும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது. மாதாந்தம் 250,000 ரூபா வட்டிக்கும் வருடாந்தம் 30 இலட்சம் ரூபா நிதிக்குமான வருமான வரி நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.