உக்காத பொலித்தீன் பாவனை தொடர்பில் சுற்றிவளைப்பு 

உக்காத பொலித்தீன் பாவனை தொடர்பிலான சுற்றிவளைப்புகள் மீள ஆரம்பம்

by Staff Writer 06-07-2020 | 5:31 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றினால் நிறுத்தப்பட்டிருந்த உக்காத பொலித்தீன் பாவனை தொடர்பான சுற்றிவளைப்புகளை மீள ஆரம்பிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை தீர்மானித்துள்ளது. உக்காத பொலித்தீன் மற்றும் உணவு பொதியிடும் பொலித்தீனை மக்கள் பயன்படுத்துகின்றமை கண்காணிப்புகளில் தெரியவந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றிவளைப்புகளை அதிகரிக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபை தீர்மானித்துள்ளது. 2017 செப்டெம்பர் முதலாம் திகதி அதிவிசேட வர்த்தமானியினூடாக பொலித்தின் தொடர்பில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அமைய சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 20 மைக்ரோவிற்கு குறைந்த பொலித்தீன் பாவனை, உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொலித்தீனை மூலப்பொருளாக கொண்டு உணவு உற்பத்திகளை நாட்டுக்குள் விற்பனை செய்தல், இலவசமாக வழங்குதல், காட்சிப்படுத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.