கையளிக்கப்படாத வாகனங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணை

இதுவரை கையளிக்கப்படாத வாகனங்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணை ஆரம்பம் 

by Staff Writer 05-07-2020 | 8:05 AM
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களால் இதுவரை கையளிக்கப்படாத 13 வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு இது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தேர்தலில் களமிறங்கும் சில வேட்பாளர்களிடமுள்ள 13 வாகனங்கள் இதுவரை கையளிக்கப்படவில்லை என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் இரண்டு வாகனங்கள் இராஜாங்க அமைச்சர் ஒருவரால் குறித்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தம் வசமுள்ள வாகனங்களை உடனடியாக கையளிக்குமாறு தனிப்பட்ட முறையில் ஏனைய வேட்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடப்படவுள்ளது. இதற்காக குறித்த அமைச்சுகளின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.