தங்க நகை திருட்டு: இருவருக்கு விளக்கமறியல்

மஸ்கெலியாவில் தங்க நகை திருட்டு: பெண் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 04-07-2020 | 6:39 PM
Colombo (News 1st) மஸ்கெலியாவில் தங்க நகையைத் திருடிய பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இருவரையும் இன்று ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். மஸ்கெலியா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றிய குறித்த பெண், வர்த்தக நிலைய உரிமையாளரின் மனைவியின் தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, மஸ்கெலியா பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, சந்தேகநபரான பெண்ணும் மற்றுமொரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்க நகையை அடகு வைத்து பெற்றுக்கொண்ட பணத்தில் முச்சக்கரவண்டி ஒன்றை கொடுப்பனவு முறையில் கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.