போட்ஸ்வானாவில் யானைகள் மர்மமான முறையில் மரணம்

போட்ஸ்வானாவில் 2 மாதங்களில் 350-க்கும் அதிகமான யானைகள் மர்மமான முறையில் மரணம்

by Bella Dalima 03-07-2020 | 4:58 PM
Colombo (News 1st) ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த 2 மாதங்களில் 350-க்கும் அதிகமான யானைகள் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளன. உலகிலேயே அதிக யானைகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் போட்ஸ்வானா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 1,30,000-இற்கும் அதிகமான யானைகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் உள்ள காடுகளில் கடந்த மே மாதம் முதல் மொத்தம் 350 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதை விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். யானைகள் எப்படி உயிரிழந்தன என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. உயிரிழந்துள்ள யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்படவில்லை. ஆகையால், இவை வேட்டையாடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பெரும்பாலான யானைகள் செங்குத்தாக தரையில் விழுந்தவாறு உயிரிழந்துள்ளன. இதனால் நரம்பியல் தொடர்புடைய நோய் ஏதேனும் யானைகளுக்கு பரவி இருக்கக்கூடும் எனவும், அதன் காரணமாக யானைகள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் போன்ற தொற்று யானைகளுக்கும் பரவி இருக்கலாம் எனவும் அதனால் யானைகள் உயிரிழந்திருக்கலாம் எனவும் பலர் கருதுகின்றனர். இதற்கிடையில், சில யானைகள் உடல் நிலை மோசமான நிலையில் ஒரே பகுதியைத் தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருப்பதாகவும், அவைகளால் தங்கள் பாதைகளை ஏதோ காரணத்தால் மாற்ற முடியவில்லை எனவும் சரணாலயத்தை ஆய்வு செய்த விலங்குகள் நல ஆர்வலர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உயிரிழந்த யானைகளின் உடலில் இருந்து பரிசோதனைக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக தென் ஆப்பிரிக்கா, ஜிப்பாப்வே, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.