உத்தர பிரதேசத்தில் 8 பொலிஸார் கொலை

உத்தர பிரதேசத்தில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட 8 பொலிஸார் கொலை

by Bella Dalima 03-07-2020 | 4:31 PM
Colombo (News 1st)  உத்தர பிரதேசத்தின் கான்பூரில் குற்றவாளியொருவரைக் கைது செய்ய சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார். 60 குற்றங்களுடன் தொடர்புடைய திட்டமிட்ட குற்றச்செயலில் ஈடுபடும் ஒருவரை கைது செய்வதற்காகவே நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, 60 குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடைய Vikas Dubey எனும் நபரைக் கைது செய்ய பொலிஸார் முயன்றுள்ளனர். குற்றவாளி இருந்த கட்டடத்தை பொலிஸ் குழு நெருங்கிய போது, கட்டடத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து பொலிஸார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.