மஹேலவிடம் வாக்குமூலம் பதிவு செய்தல் ஒத்திவைப்பு

ஆட்ட நிர்ணயம்: மஹேலவிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஒத்திவைப்பு

by Staff Writer 03-07-2020 | 3:40 PM
Colombo (News 1st) விளையாட்டுக் குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டமை தமது தனிப்பட்ட விடயத்திற்காக அல்லவென டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார். விசேட விசாரணைப் பிரிவிற்கு இன்று காலை வருகை தந்த போதே அவர் இதனை குறிப்பிட்டார். 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே மஹேல ஜயவர்தன இன்று விசேட விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும், வேறொரு நடவடிக்கை காரணமாக மஹேலவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையை பிற்போடுவதாக விசேட விசாரணைப் பிரிவு நேற்று அவருக்கு அறிவித்தது. இருப்பினும், சில ஊடகங்களில் வௌியிடப்பட்டிருந்த விடயங்களைத் தௌிவுபடுத்திக்கொள்ளும் நோக்கில், விசாரணைப் பிரிவிற்கு இன்று சென்றதாக மஹேல குறிப்பிட்டார். 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் சதமடித்த மஹேல ஜயவர்தன இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்பெறச் செய்தார். 13 பவுண்டரிகளை விளாசிய மஹேல ஜயவர்தன , 88 பந்துகளில் 103 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்தார். 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் இரண்டாவது தடவையாகவும் அன்று அவர் சதம் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் தெரிவுக்குழு தலைவராக செயற்பட்ட அரவிந்த டி சில்வா மற்றும் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க ஆகியோரிடம் ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்காரவிடம் நேற்று சுமார் 9 மணித்தியாலங்கள் விசேட விசாரணைப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்தது.