தேவை அறிந்து வங்கி சேவை முன்னெடுக்கப்படவேண்டும்

மக்களின் தேவைகளை அறிந்து வங்கி சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்

by Staff Writer 02-07-2020 | 7:07 PM
Colombo (News 1st) கிராமத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் தேவைகளை அறிந்து வங்கி சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வௌிநாட்டவர்கள் வருகை தந்து தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும் வரை காத்திருக்காமல், ஏற்றுமதி விவசாயத்தை மேம்படுத்த வேண்டியது காலத்தின் தேவை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நண்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிராந்திய அபிவிருத்தி வங்கியின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளை உருவாக்குவது மாத்திரம் அபிவிருத்தி அல்ல எனவும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு கிராமிய தொழில் முயற்சிகளை விருத்தி செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நீண்ட கால அடிப்படையில் வழங்கப்பட்ட கடன்களை மீள செலுத்தத் தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை அறவிடுவதற்கான பொறிமுறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஸ்மன் உள்ளிட்டவர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.