வாக்குமூலமளிக்க வருமாறு சங்கக்காரவிற்கு அழைப்பு

ஆட்ட நிர்ணயம்: வாக்குமூலமளிக்க வருமாறு குமார் சங்கக்காரவிற்கு அழைப்பு

by Bella Dalima 01-07-2020 | 9:12 PM
Colombo (News 1st) முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகேவின் கருத்து தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் அளிக்க வருமாறு முன்னாள் அணித்தலைவரான குமார் சங்கக்காரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக மஹிந்தானந்த அளுத்கமகே கூறியமை தொடர்பாக விசாரணை நடைபெறுவதுடன் இன்று உபுல் தரங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. உபுல் தரங்க இன்று முற்பகல் 10 மணியளவில் விசாரணைப் பிரிவிற்கு சமூகமளித்தார். முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவரான அரவிந்த டி சில்வாவிடம் நேற்று 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதேவேளை, 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்ட குமார் சங்கக்காரவிற்கு நாளை (02) வாக்குமூலம் வழங்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.