துப்பாக்கிகள் மீட்பு: விசாரணை CID இடம் ஒப்படைப்பு

ஹோமாகமயில் துப்பாக்கிகள் மீட்கப்பட்டமை குறித்த விசாரணைகள் CID இடம் ஒப்படைப்பு

by Staff Writer 30-06-2020 | 1:06 PM
Colombo (News 1st) ஹோமாகம - பிட்டிபன பகுதியில் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் 19 துப்பாக்கிகள் காணப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. எனினும் 12 துப்பாக்கிகளே கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஏனைய 7 துப்பாக்கிகள் எந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் தமது படையினரும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. தடுத்துவைக்கப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கொஸ்கொட தாரகவிடமும் ககன எனும் நபரிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஹோமகம - பிட்டிபன, ​ஹைலெவல் வீதியை அண்மித்துள்ள மொரகஹஹேன வீதியில் அமைந்துள்ள மின் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிலையத்திலிருந்து 12 துப்பாக்கிகள் நேற்று கைப்பற்றப்பட்டன. இவற்றில் T 56 ரக 11 துப்பாக்கிகளும் T 81 ரக துப்பாக்கி ஒன்றும் உள்ளடங்குகின்றன. துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர் குறித்த பகுதியைச் சேர்ந்த 'பொட்ட கபில' என அறியப்படும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கும் சிறைச்சாலையில் உள்ள குற்றவாளியான ககன என்பவருக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அறியக்கிடைக்கின்றது.