by Staff Writer 30-06-2020 | 5:26 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர்கள் கையளிக்காத ஐந்திற்கும் மேற்பட்ட வாகனங்களைக் கையகப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், கையளிக்கப்பட்டிருக்க வேண்டிய சில வாகனங்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இதுவரை கையளிக்கவில்லையென அவர் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சுப் பதவிகள் தற்போது இல்லையென்பதால், உத்தியோகபூர்வ வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் கூறினார்.
வாகனங்கள் கையகப்படுத்தப்பட்ட பின்னர் சட்டம் மீறப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், எதிர்வரும் பொதுத்தேர்தலில் குறித்த அரசியல்வாதிகளின் ஆசனங்கள் பறிபோகும் சந்தர்ப்பமுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இதனிடையே, உத்தியோகபூர்வ வாகனங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏனைய இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களை பொறுப்பேற்குமாறு, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டது.