கைதிகளுக்கு போதைப்பொருட்களை வழங்கிய ஐவர் கைது

சிறைச்சாலை கைதிகளுக்கு போதைப்பொருட்களை பெற்றுக்கொடுத்த ஐவர் கைது

by Staff Writer 28-06-2020 | 9:31 AM
Colombo (News 1st) கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை பெற்றுக் கொடுத்த வெலிக்கடை மற்றும் மெகசின் சிறைச்சாலைகளுக்கு அருகில் வசிக்கும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஹெரோயின், ஐஸ் மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்களும் சந்தேகநபர்களால் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பொருட்கள், சிறைச்சாலைகளின் மதிலுக்கு அருகில் இருந்து பல்வேறு முறைகளால் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர். இதேவேளை, அனைத்து சிறைச்சாலைகளிலும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சிறைச்சாலைகளின் புலனாய்வு பிரிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனியா தெரிவித்துள்ளார். இதன்பிரகாரம் நாளாந்தம் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.