சர்ச்சைக்குரிய கருத்து: இருவருக்கு பிடியாணை

வௌ்ளை வேன் கடத்தல்: சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த இருவருக்கு பிடியாணை

by Staff Writer 26-06-2020 | 3:53 PM
Colombo (News 1st) வௌ்ளை வேன் கடத்தல் தொடர்பில் சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த இரண்டு சந்தேகநபர்களுக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடயத்துடன் தொடர்புடைய வழக்கு, இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு சந்தேகநபர்களும் வேறொரு கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் எனினும், அதனை திட்டவட்டமாக உறுதிப்படுத்த முடியாதுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. சந்தேகநபர்கள் இருவர் சார்பிலும் சட்டத்தரணிகள் யாரும் ஆஜராகதமை தொடர்பில் கவனம் செலுத்திய மேலதிக நீதவான், பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளினால் பதிவு செய்யப்பட்ட சாட்சிகள் தமது திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று மன்றுக்கு அறிவித்துள்ளார். இந்த வழக்கின் மூன்றாம் மற்றும் நான்காம் சந்தேகநபர்களாக பெயிரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் மொஹமட் ரூமி ஆகியோர் இன்று மன்றில் ஆஜராகியிருந்தனர். வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.