திட்ட யோசனை ஒன்றை முன்வைக்குமாறு பிரதமர் கோரிக்கை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கு திட்ட யோசனை ஒன்றை முன்வைக்குமாறு பிரதமர் கோரிக்கை

by Staff Writer 26-06-2020 | 3:34 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை அதிகரிப்பது தொடர்பில் சிறந்த திட்ட யோசனை ஒன்றை முன்வைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் பட்சத்தில் அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது இலகுவாக இருக்கும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக பிரதமர் ஊடகம் தெரிவித்துள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, முதலாளிமார் சம்மேளனத்தைச் சேர்ந்த பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அரச தரப்பினரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் , உபதலைவர் செந்தில் தொண்டமான், பொருளாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட குழுவினரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றியிருந்தனர். இதன்போது, பெருந்தோட்ட நிறுவனங்கள் கோருகின்ற சலுகைகளை வழங்குவதன் ஊடாக தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கின்றமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 750 ரூபாவுக்கு மேலதிகமாக தேயிலை விலைக்கான கொடுப்பனவு, உற்பத்தி மற்றும் வரவுக்கான கொடுப்பனவுகள் அடங்கலாக நாள் ஒன்றுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகம் தெரிவித்துள்ளது.

ஏனைய செய்திகள்