கொரோனா அதிகரிக்க இடமளிக்க வேண்டாம் - ஜனாதிபதி

கொரோனா தொற்று அதிகரிப்பிற்கு இடமளிக்க வேண்டாம் - ஜனாதிபதி கோரிக்கை

by Staff Writer 24-06-2020 | 1:10 PM
Colombo (News 1st) அலட்சியமாக செயற்பட்டால் இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கக்கூடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமது முகப்புத்தக பதிவினூடாக இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகள் COVID - 19 தொற்றினால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தனது முகப்புத்தக பதிவில் கூறியுள்ளார். இவ்வாறான பின்புலத்தில் ஒன்றிணைந்த செயற்பாட்டினூடாக கொரோனா வைரஸ் தொற்றை குறைத்துக்கொள்ள முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனினும், நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதனை அதிகரிப்பதற்கு இடமளிக்கக்கூடாது என ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தனது முகப்புத்தக பதிவில் கூறியுள்ளார். சுகாதார தரப்பினரும் அரசாங்கமும் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது முகப்புத்தக பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.