by Staff Writer 23-06-2020 | 8:23 AM
20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி நிறைவு
Colombo (News 1st) பொதுத்தேர்தலை முன்னிட்டு 20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு வருவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்திற்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை 13 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மாத்தளை, நுவரெலியா, மாத்தறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, இரத்தினபுரி, கேகாலை, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
திகாமடுல்ல மற்றும் மொனராகலை தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் இன்றைய தினத்திலும் வன்னி தேர்தல் மாவட்டத்திற்குரிய வாக்காளர் அட்டைகள் நாளைய தினத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என அரச அச்சகர் மேலும் தெரிவித்துள்ளார்.