குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக கால அவகாசம் கோரினார் கருணா

by Staff Writer 23-06-2020 | 8:51 PM
Colombo (News 1st) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக முடியாது என கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சட்டத்தரணிகளூடாக அறிவித்துள்ளார். சுகயீனம் காரணமாக தனக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக முடியாதுள்ளதாக கருணா அம்மான் தெரிவித்துள்ளார். வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு நேற்று (22) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் ஆஜராகவில்லை. இன்று மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் அவர் ஆஜராகாததால், அம்பாறை மற்றும் மட்டக்களப்பிற்கு விசாரணைக் குழுவொன்றை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.