PCR பரிசோதனைகளை 1000 ஆக அதிகரிக்குமாறு ஆலோசனை

கட்டுநாயக்கவில் PCR பரிசோதனைகளை அதிகரிக்குமாறு பிரதமர் ஆலோசனை

by Staff Writer 21-06-2020 | 8:18 AM
Colombo (News 1st) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை விரைவில் திறக்கும் நோக்கில் சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. PCR பரிசோதனை அறிக்கையை 2 மணித்தியாலங்களுக்குள் பயணிகளிடம் ஒப்படைப்பதற்கான திட்டமொன்றை வகுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்கு வருகைதரும் பயணிகளுக்காக, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீளத்திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் , அடுத்த மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் விமான நிலையத்தை மீளத் திறக்குமாறு சுற்றுலாத்துறை பிரதிநிதிகள் கோரியுள்ளதாக பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் பல நாடுகளிலும் விமான சேவைகளுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் , இந்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்படுமென பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.