2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை: வெற்றுக்கண்களால் அவதானிக்க வேண்டாமென எச்சரிக்கை

by Staff Writer 20-06-2020 | 3:31 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை (21) நிகழவுள்ளது. இலங்கை மக்களுக்கு அரை சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். நாளை காலை 9.15 மணி முதல் 6 மணித்தியாலங்களுக்கு சூரிய கிரகணம் நீடிக்கும். நாளை காலை 10.20 அளவில் அரை சூரிய கிரகணத்தை கொழும்பு நகரில் காண முடியும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார். காலை 10.24 அளவில் யாழ்ப்பாணத்திலும் காலை 10.34 அளவில் மாத்தறையிலும் அரை சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும். இது நெருப்பு வளைய சூரிய கிரகணமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும். இந்நிலையில், வெற்றுக்கண்களால் கிரகணத்தை அவதானிக்க வேண்டாமென ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.