சமய வழிபாடுகளுக்கு முன்னுரிமையளித்து பிறந்தநாளைக் கொண்டாடினார் ஜனாதிபதி

by Staff Writer 20-06-2020 | 8:11 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் 71 ஆவது பிறந்த தினம் இன்றாகும். சமய வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து ஜனாதிபதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அனுராதபுரம் ருவன்வெலி ஷாய மகா விகாரையில் இன்று காலை விசேட பூஜையில் கலந்துகொண்டார். பௌத்த சம்பிரதாயங்களுடனான விசேட பூஜையில் பங்கேற்ற ஜனாதிபதி, தூபிக்கு பாலாபிஷேகமும் செய்தார். ஜனாதிபதி இதன்போது ருவன்வெலி ஷாய வளாகத்திலுள்ள துட்டகைமுனு மன்னன் மற்றும் விஹாரமகாதேவியின் உருவச்சிலைகளுக்கு மலர் தூவினார். அதனைத் தொடர்ந்து அவர் விகாரைக்குள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். ஜனாதிபதி கோட்டாபயவின் பங்களிப்புடன் இன்று காலை மகா சங்கத்தினருக்கான தான நிகழ்வு இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர் சமல் ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஜனாதிபதியின் குடும்பத்தவர்களும் அமைச்சர்கள் சிலரும் இதில் கலந்துகொண்டனர். இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்று அஸ்கிரிய பூர்வாராம விஹாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது அவர் வடமத்திய மாகாணத்தின் பௌத்த மதத் தலைவரான பொதானே தம்மானந்த தேரரிடம் ஆசி பெற்றார். மூன்று தசாப்த கால யுத்தத்திலிருந்து நாட்டை விடுவிக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ராஜபக்ஸ, COVID-19 தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க ஆற்றிய பணிக்கு தேரர் இதன்போது பாராட்டுத் தெரிவித்தார். விஹாரையில் சேதமடைந்துள்ள கட்டடத்தை புனர் நிர்மாணிக்கவும், 40 வருடங்களுக்கு முன்னர் இழப்பீடு கொடுக்காமல் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பாக தீர்வுக் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். குட்டம் பொக்குன விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, விஹாராதிபதி இஹலகம பவரகித்தி தேரரிடம் ஆசி பெற்றார். இதன்போது விஹாரையில் வழிபாடுகளில் ஈடுபட வந்திருந்த பக்தர்களுடனும் ஜனாதிபதி சிநேகப்பூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார்.