காணி அளவீட்டிற்கு எதிர்ப்பு: பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 19-06-2020 | 10:00 PM
 Colombo (News 1st) காணி அளவீட்டு நடவடிக்கைக்கு எதிராக அம்பாறை - பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொத்துவில் முஹுதுமகா விகாரையை அண்மித்த பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட காணி அளவீட்டு நடவடிக்கைக்கு எதிராக இன்றும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணி அளவீட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மக்கள் சார்பாக 5 பேரை பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு இன்று காலை 9.30 மணிக்கு வருமாறு பிரதேச செயலாளர் நேற்று (18) அறிவித்திருந்தார். இதன்போது, பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக கலகத்தடுப்பு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, பொத்துவில் முஹுதுமகா விகாரையை அண்மித்த பகுதியில் இன்று காணி அளவீட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாகவும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.