by Bella Dalima 19-06-2020 | 4:03 PM
Colombo (News 1st) 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுக் குற்றங்களைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவில் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
மும்பை - வான்கடே மைதானத்தில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும் மோதின.
இந்த போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் தம்மிடம் சகல ஆதாரங்களும் இருப்பதாகவும் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று (18) தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரான K.D.ருவன்சந்திரவிற்கு அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த ஆலோசனைக்கு அமைவாகவே விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை அறிக்கை சமர்ப்பிக்குமாறும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், விளையாட்டுக் குற்றங்களை தடுக்கும் விசேட விசாரணைப் பிரிவிற்கு அறிவித்துள்ளார்.