கொரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க முடியும் 

இந்த வருட இறுதியில் கொரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க முடியுமென உலக சுகாதார ஸ்தாபனம் நம்பிக்கை

by Bella Dalima 19-06-2020 | 4:44 PM
Colombo (News 1st) இந்த வருட இறுதியில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க முடியுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. COVID-19 தொற்றுக்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் உலகளாவிய ரீதியில் மருந்து கண்டுபிடிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி செளம்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் 200-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 10 மருந்துகள் , மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆகவே, இந்த வருட இறுதிக்குள் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மருந்துகள் தயாரிக்கப்படுமென்பதில் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி செளம்யா சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். COVID-19 தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் எத்தனை தோல்விகளைக் கண்டாலும் நம்பிக்கையை கைவிடாமல் முன்நோக்கி செல்வது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய ரீதியில் 8.6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், 4 ,57,000 பேர் உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும், 45 ,58,000 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.