இம்ரானின் தந்தை மீது தாக்குதல்: விசாரணைகள் ஆரம்பம்

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்: விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 18-06-2020 | 9:10 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தற்காரரும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவருமான கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது கொழும்பு மாளிகாவத்தையில் நேற்று (17) பிற்பகல் சிலர் கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தின் CCTV காட்சி வௌியாகியுள்ளதுடன், விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு - மாளிகாவத்தை, சத்தர்ம மாவத்தைக்கு அருகே முச்சக்கரவண்டியில் வந்த மூவர் கொடூரமான முறையில் கூரிய ஆயுதங்களால் தாக்கும் காட்சிகள் CCTV கெமராக்களில் தௌிவாகப் பதிவாகியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டி, தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் நான்கு சந்தேகநபர்களை இன்று பிற்பகல் வரை பொலிஸார் கைது செய்திருந்தனர். சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார். தாக்குதல் நடத்திய மேலும் இருவரும் அதற்கு உடந்தையாக செயற்பட்ட ஒருவரும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் அனுராதபுரம், ஹேனமுல்ல மற்றும் மாதம்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

ஏனைய செய்திகள்