லீசிங் நிறுவன முறைகேடுகளை ஆராய குழு நியமனம் 

லீசிங் நிறுவன முறைகேடுகளை ஆராய  மூவரடங்கிய குழு நியமனம் 

by Staff Writer 17-06-2020 | 5:44 PM
Colombo (News 1st) நிதி மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள், சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மனினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக ஜனாதிபதி செயலகத்தின் சட்டத்துறை ஆணையாளர் நாயகம் , சட்டத்தணி ஹரிகுப்த ரோஹனதீர (Harigupta Rohanadeera) செயற்படவுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் சட்டத்துறை பணிப்பாளர் K.G.G. சிறிகுமார மற்றும் மத்திய வங்கியின், வங்கிகளற்ற நிதி நிறுவனங்களை முகாமைத்துவப்படுத்தும் பிரிவின் பணிப்பாளர் J.G. கம்லத் ஆகியோர் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் குத்தகை மற்றும் லீசிங் நடவடிக்கைகள் தொடர்பில் இந்த குழு ஆராயவுள்ளது. மத்திய வங்கியில் பதிவு செய்துள்ள நிதி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களின் போது , சமூகத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகள் மற்றும் அவற்றை முகாமைத்துவம் செய்வது எவ்வாறு என்பது தொடர்பிலும் இந்த குழு ஆராய்ந்து பரிந்துரை செய்யவுள்ளது. இந்த குழுவின் அறிக்கை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். குழுவின் செயற்பாடுகளுக்கு வங்கித்துறை மற்றும் சட்டத்துறையில் சிரேஷ்டத்துவம் மிக்க ஓய்வுபெற்ற, நிபுணர்களை இணைத்துக்கொள்ளுமாறு மத்திய வங்கியின் ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.