மத்திய வங்கி அதிகாரிகள் இருவரிடம் வாக்குமூலம்

மத்திய வங்கி அதிகாரிகள் இருவர் குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் 

by Staff Writer 17-06-2020 | 12:26 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். ETI நிதி முறைகேடு தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் ஒரு கட்டமாக அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. குறித்த அதிகாரிகள் நேற்று (16) மாலை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகை தந்து வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதனிடையே, ETI நிறுவனத்தின் பணிப்பாளர்கள் நால்வரை கைது செய்தி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்தது. ETI நிறுவனத்தில் நிதி வைப்பிலிட்ட மூவரினால் தொடரப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகத் தவறியமையால் ETI நிறுவனத்தின் 4 பணிப்பாளர்களுக்கு பிடியாணை பிறப்பித்து மேலதிக நீதவான் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.