முறிகள் மோசடி: பிடியாணையை செயற்படுத்துமாறு உத்தரவு

இரண்டாவது முறிகள் மோசடி: அர்ஜுன மகேந்திரனுக்கு எதிரான பிடியாணையை செயற்படுத்துமாறு உத்தரவு

by Staff Writer 17-06-2020 | 6:38 PM
Colombo (News 1st) இரண்டாவது முறிகள் மோசடி தொடர்பில் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவாவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் CID-க்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 06 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை செயற்படுத்துமாறே கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டுள்ளார். மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது, 51.98 பில்லியன் ரூபா பொது நிதியை முறையற்ற விதத்தில் கையாண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் எட்டாவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான முத்துராஜா சுரேந்திரனை அடுத்த விசாரணையின் போது மன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போதே அரச நிதி முறையற்ற விதத்தில் கையாளப்பட்டுள்ளதாகத் தெரிவித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க , வழக்கின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களில் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 07 பேர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த பின்னர், கோட்டை நீதவானால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.