ஜூலை 14 ஆம் திகதி முதல் தபால் மூல வாக்களிப்பு 

ஜூலை 14 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு தபால் மூல வாக்களிப்பினை நடத்த தீர்மானம்

by Bella Dalima 16-06-2020 | 6:27 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பினை எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 03 நாட்களுக்கு நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மாவட்ட செயலக அதிகாரிகள், தேர்தல் செயலக அதிகாரிகள், பொலிஸார், பாதுகாப்பு பிரிவினர், சுகாதாரத் துறையினர் ஆகியோர் ஜூலை மாதம் 16 ஆம் திகதியும் 17 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அரச உத்தியோகத்தர்கள் ஜூலை மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த தினங்களில் தபால் மூலம் வாக்களிக்கத் தவறும் வாக்காளர்கள் ஜூலை மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் தாம் கடமையாற்றும் அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் தேர்தல்கள் செயலகத்திற்கு சென்று தபால் மூலம் வாக்களிக்க முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் தபால் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன. அதற்கமைய, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடு ஜூலை மாதம் 29 ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜூலை மாதம் 29 ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள், 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்த முகவரிக்கான தபால் நிலையத்திற்கு சென்று, தமது அடையாளத்தை உறுதி செய்து வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும். இதேவேளை, தபால் மூல வாக்காளர்களுக்கான பட்டியல் எதிர்வரும் 18 ஆம் திகதி உறுதிப்படுத்தப்படவுள்ளது. தபால் மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதிகள் எதிர்வரும் 30 மற்றும் முதலாம், 2 ஆம் திகதிகளில் தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.