சீன -  இந்திய இராணுவ வீரர்கள் மோதல்  

சீன இராணுவத்தின் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் மூவர் உயிரிழப்பு

by Bella Dalima 16-06-2020 | 3:28 PM
Colombo (News 1st) லடாக் எல்லையில் சீன இராணுவம் நடத்திய தாக்குதலில் 3 இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் 5 ஆம் திகதி இந்திய படைகளும் சீன படைகளும் மோதிக்கொண்டன. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவி வந்தது. கடந்த 6 ஆம் திகதி, இந்தியா-சீனா இராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கருத்தொற்றுமை ஏற்பட்டதால், எல்லையில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கிச் சென்றன. தொடர்ந்து படைப்பிரிவு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சீனாவுடனான இந்தியாவின் எல்லை பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், சீன தரப்புடன் தொடர்ச்சியான உயர் பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே கூறியிருந்தார். பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், லடாக் எல்லைப் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா-சீன படைகள் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதில், இந்திய இராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.