அரச வங்கிகள் பங்களிப்பு வழங்க வேண்டும் - ஜனாதிபதி

அரச வங்கிகள் பங்களிப்பு வழங்க வேண்டும் - ஜனாதிபதி

by Staff Writer 15-06-2020 | 6:54 PM
Colombo (News 1st) வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு அரச வங்கிகள் நேரடி பங்களிப்பை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை வங்கியின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (15) பகல் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இந்த விடயம் குறித்து தௌிவுபடுத்தியுள்ளார். 2015 ஆம் ஆண்டளவில் 7 மற்றும் 8 வீதமாக அதிகரித்திருந்த பொருளாதார முன்னேற்றம், 2019 ஆம் ஆண்டளவில் 2 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். Covid - 19 பரவல் காரணமாக உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனால், நாட்டின் பொருளாதார எழுச்சிக்காக அரசின் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியதன் பொறுப்பு அரச வங்கிகளிடம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.