போதைப்பொருள் பாவனை: மற்றுமொரு புனர்வாழ்வு மையம் 

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புனர்வாழ்வு; மற்றுமொரு மத்திய நிலையம் ஸ்தாபிப்பு 

by Staff Writer 14-06-2020 | 10:46 AM
Colombo (News 1st) போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக மேலுமொரு மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி நிட்டம்புவ பகுதியில் குறித்த மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் குற்றங்களுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்படும் குற்றவாளிகள், குறித்த புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்படவுள்ளதாக சபையின் தலைவர், டொக்டர் வெலகெதர குறிப்பிட்டார். அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையின் தரவுகளுக்கு அமைய நாடளாவிய ரீதியில் 97,000 இற்கும் மேற்பட்டோர், ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். ஐஸ் போதைப்பொருளுக்கு சுமார் 20,000 பேர் அடிமையாகியுள்ளதுடன், 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளதாகவும் தரவுகளின் ஊடாக தெரியவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்திலேயே உள்ளதாகவும் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.