சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்றும் பணி ஆரம்பம்

சட்டவிரோத சுவரொட்டி, பதாகைகளை அகற்றும் பணி ஆரம்பம்

by Staff Writer 14-06-2020 | 11:20 AM
Colombo (News 1st) பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவற்றை அகற்றும் நடவடிக்கைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்தும் நோக்கில் இன்று (14) முதல் இந் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாடளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிக்குமாறு அனைத்து பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறினார். சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள் மற்றும் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள மற்றும் பொருத்தப்பட்டுள்ள பதாகைகளும் இன்று அகற்றப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறான பதாகைகள், மற்றும் சுவரொட்டிகள் காணப்படும் பட்சத்தில் அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறும் பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.