வைத்தியசாலை கொள்ளையை முறியடித்த SIS விபத்தில் பலி 

கொழும்பு வைத்தியசாலை கொள்ளைச் சம்பவத்தை முறியடித்த பொலிஸ் அதிகாரி விபத்தில் உயிரிழப்பு

by Staff Writer 14-06-2020 | 11:35 AM
Colombo (News 1st) தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 79 இலட்சம் ரூபா கொள்ளைச் சம்பவத்தை முறியடித்து சந்தேகநபரை கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபள், விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். குறித்த பொலிஸ் கான்ஸ்டபள் பயணித்த மோட்டார்சைக்கிள், கடந்த வியாழக்கிழமை டிபெண்டர் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். விபத்துடன் தொடர்புடைய 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது. புதுக்கடை இலக்கம் 7 நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதுடன், நாளை (15) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.