லீசிங் நிறுவனங்களின் முறைப்பாடுகளை ஏற்க வேண்டாம்

லீசிங் நிறுவனங்களின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம்: ஜனாதிபதி உத்தரவு

by Staff Writer 13-06-2020 | 7:05 PM
Colombo (News 1st) கடன் தவணைகள் செலுத்தப்படவில்லையென தெரிவித்து லீசிங் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் எவ்வித முறைப்பாடுகளையும் ஆறு மாதங்கள் சலுகைக் காலம் நிறைவடையும் வரை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். குத்தகை அடிப்படையில் வாகனங்களை கொள்வனவு செய்துள்ளவர்கள் கடன் தவணைகளை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர்களினால் செலுத்தப்பட வேண்டிய லீசிங் கடன் தவணையை அறவிடுவதை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சுற்றுநிரூபத்தின் ஒன்பதாவது பந்தியில் முச்சக்கர வண்டிகள், ட்ரக் வண்டிகள், பாடசாலை பஸ் வண்டிகள் மற்றும் வேன்கள், சுயதொழிலுக்காக பயன்படுத்தப்படும் கார்கள் போன்ற பதினைந்து இலட்சம் வாகனங்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. இவ்வாறான நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், சில லீசிங் நிறுவனங்களும் நிதி நிறுவனங்களும் கடன் தவணை செலுத்தத் தவறுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் இவ்வாறான நடவடிக்கைகளை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி நேற்று பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.