புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் தோண்டியெடுப்பு

நோர்வூட்டில் புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் தோண்டியெடுப்பு: தாய் கைது

by Staff Writer 13-06-2020 | 5:58 PM
Colombo (News 1st) நோர்வூட்டில் புதைக்கப்பட்ட ஆண் சிசுவொன்றின் சடலம் இன்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. சிசுவின் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். சிசுவின் சடலம் இன்று ஹட்டன் பதில் மாவட்ட நீதவான் எஸ். ராமமூர்த்தி மற்றும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கேஷான் மதுஷங்க முன்னிலையில் நோர்வூட் பொலிஸாரினால் தோண்டியெடுக்கப்பட்டது. நோர்வூட்டைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணுக்கு, வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளதுடன் சிசுவை தோட்டத்தில் புதைத்துள்ளதாக நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் தந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிசு புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பெண் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார். தோண்டியெடுக்கப்பட்ட சிசுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.