திருகோணமலையில் கடத்தப்பட்ட 8 வயது சிறுமி மீட்பு: கடத்தியவர் தப்பியோட்டம்

by Staff Writer 13-06-2020 | 8:18 PM
Colombo (News 1st) திருகோணமலை நகரில் சிறுமியொருவரைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைத் தேடி பொலிஸார் சுற்றிவளைப்பை ஆரம்பித்துள்ளனர். 8 வயதான குறித்த சிறுமி இன்று காலை தமது இரு பாட்டிகளுடன் திருகோணமலை நகருக்கு சென்றுள்ளார். இதன்போது, சிறுமிக்கு தண்ணீர் போத்தலொன்றை கொள்வனவு செய்வதற்காக, அருகில் இருந்த இளைஞர் உதவுவதாகக் கூறி சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். அதிக நேரம் சென்ற பின்னரும் குறித்த இளைஞர் சிறுமியுடன் திரும்பாததைத் தொடர்ந்து சிறுமியின் பாட்டிமார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதன் பின்னர் திருகோணமலை நகரின் விற்பனை நிலையங்களிலுள்ள CCTV காட்சிகளை சோதனைக்குட்படுத்திய பொலிஸார், குறித்த இளைஞர் சிறுமியுடன் கடற்கரை நோக்கி சென்றதைக் கண்டறிந்துள்ளனர். இதன் பின்னர் துரிதமாக கடற்கரை நோக்கி விரைந்த பொலிஸார் சிறுமியைக் கண்டுபிடித்துள்ளனர். தப்பிச்சென்றுள்ள இளைஞரைத் தேடி பொலிஸார் சுற்றிவளைப்பை ஆரம்பித்துள்ளனர்.