அனைத்து அரச பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 22ஆம் திகதி திறக்கப்படுகின்றன

by Staff Writer 13-06-2020 | 7:57 PM
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழகங்களினதும் இறுதி ஆண்டுப் பரீட்சையை இம்மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைக் கூறினார். அவர் தெரிவித்ததாவது,
நாட்டிலிருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சை இம்மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சையை ஆகஸ்ட் 15 ஆம் திகதியளவில் நடத்தி முடிப்பதற்கு சகல பல்கலைக்கழகங்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவு இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கபடவுள்ளது. அதனுடன், கற்கைகள் 29 ஆம் திகதி ஆரம்பமாகின்றன. சட்ட பீடமும், விஞ்ஞான பீடமும் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றன. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விவசாய பீடம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகஸ்ட் மாதத்தில் நான்காம் ஆண்டு மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்து. எனினும், அவர்கள் சகல பரீட்சைகளையும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி முடித்துவிடுவார்கள். விடுதிகளில் ஓர் அறையில் ஒரு மாணவர் தங்கும் வகையில் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சையை நடத்திச் செல்ல எதிர்பார்க்கிறோம். அதற்கமைய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன
இதேவேளை, முதற்கட்ட நடவடிக்கையாக சகல மருத்துவ பீடங்களினதும் இறுதி ஆண்டுக்கான வைத்திய பட்டத்திற்கான தேர்வுகள் ஜூன் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் ஏனைய பீடங்களின் மாணவ அணிகளின் சிரேஷ்டத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து ஜூன் 22 ஆம் திகதி பரீட்சைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டார். முகக்கவசம் உள்ளிட்ட சகல சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றுமாறு மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இரவு 7 மணியின் பின்னர் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் சஞ்சரிக்க முடியாது எனவும் பல்கலைக்கழகத்தின் உள்ளே அல்லது வெளியில் ஒன்று கூடுவதோ, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவதோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சகல நிர்வாக அதிகாரிகளும் எதிர்வரும் திங்கட்கிழமை பணிக்கு திரும்ப வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.