by Staff Writer 12-06-2020 | 6:54 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் இருவேறு தாக்குதல் சம்பவங்கள் நேற்றிரவு பதிவாகியுள்ளன.
யாழ். தென்மராட்சி மிருசுவில் ரயில் நிலையத்திற்கு முன்பாகவுள்ள நிறுவனமொன்றின் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு 11.40 அளவில் இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரிடம் வினவிய போது, குறித்த நிறுவனம் பதிவு செய்யப்படாதவொன்று எனவும், குடும்பத்தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினர்.
இதேவேளை, யாழ். மீசாலை - புத்தூர் வீதியிலுள்ள வீடொன்றின் மீது அடையாளந் தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு வீட்டிற்குள் நுழைந்த சிலர், வீட்டு உரிமையாளர்கள் மீது பொல்லால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பண கொடுக்கல் வாங்கலால் இந்தத் தகராறு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.