தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஜனாதிபதிக்கு கடிதம்

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 12-06-2020 | 5:31 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் விக்னேஸ்வரன், EPRLF தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா மற்றும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழக செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ், 10 - 15 வருடங்களுக்கு மேல் சிறைவைக்கப்பட்டிருக்கும் 91 தமிழ் அரசியல் கைதிகளுக்காக நீதி வேண்டி இந்த மேன்முறையீட்டை சமர்ப்பிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைவைக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாகக் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையிலேயே அவர்கள் இழந்துவிட்டார்கள் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மட்ட இயக்கத் தலைவர்களான கருணா அம்மான், பிள்ளையான், கே.பத்மநாதன் போன்றோர் விடுவிக்கப்பட்ட போது தாமும் விடுவிக்கப்படுவோம் என்ற நியாயமான எதிர்பார்ப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கு அப்போது இருந்ததாகவும் அது தொடர்பாக நல்ல தீர்மானத்தை எடுக்குமாறும் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளில் இருவர் கடந்த காலத்தில் உயிரிழந்தமையை சுட்டிக்காட்டியுள்ளதுடன், தற்போது இருப்பவர்களின் விடுதலை குறித்து கருணை உள்ளத்தோடும் இரக்க சிந்தனையோடும் மீளாய்வு செய்யுமாரும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.