போராட்டங்களை கலைப்பதற்கான மாற்று வழி தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை

by Staff Writer 11-06-2020 | 2:04 PM
Colombo (News 1st) எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை கலைப்பதற்கு தாக்குதல் நடத்தாது மாற்று வழிகளூடாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். நேற்று முன்தினம் (09) முன்னிலை சோசலிச கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார். கொரோனா வைரஸ் ஒழிப்பிற்கு சமூக இடைவௌியை பேணுதல் கட்டாயமானதாகும். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தரவு பெற்றிருந்த போதும், ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டமையால் அதனை கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். கொரோனா ஒழிப்பிற்கான கட்டாய நிபந்தனையாக சமூக இடைவௌியை பேணுதல் காணப்படுகின்றதாக கூறிய அமைச்சர், ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை பிறப்பித்துள்ளமையையும் மீறி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, கலைந்துசெல்லுமாறு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனாலும் ஆர்ப்பாட்டகாரர்கள் தொடர்ந்தும் அங்கு செயற்பட்டமையால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மீதே முதலில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்கான ஔிப்பதிவு ஆதாரங்கள் காணப்படுவதாகவும் எதிர் தாக்குதலை பொலிஸார் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார். தாக்குதலை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியோ, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களோ பொலிஸாருக்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கவலையடைவதாகவும் பந்துல குணவர்தன இதன்போது குறிப்பிட்டார். தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதே தவிர, எவ்வித உத்தரவின் பிரகாரமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒடுக்கப்படவில்லை எனவும் இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் இருப்பதற்கு ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு மாற்றுவழிகளை திட்டமிடுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறிய அமைச்சர், கொரோனா ஒழிப்பிற்கான தனிமைப்படுத்தல் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய எதிர்ப்பில் ஈடுபடுவோர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவர்கள் 14 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு சென்ற பொலிஸார் முதலில் இன்று முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதன்போது கருத்து தெரிவித்தார்.