புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப உதவிய அமிதாப்

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சொந்த செலவில் 6 விமானங்களை ஏற்பாடு செய்த அமிதாப் பச்சன்

by Bella Dalima 11-06-2020 | 3:38 PM
புலம்பெயர் தொழிலாளர்கள் தமது ஊர்களுக்கு செல்ல உதவும் பொருட்டு, பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது சொந்த செலவில் 6 விமானங்களை ஏற்பாடு செய்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வேலையிழந்து வேறு மாநிலங்களில் சிக்கித்தவித்த புலம்பெயர் தொழிலாளர்களை இந்தியாவின் மத்திய-மாநில அரசுகள் பஸ்கள் மற்றும் ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றன. இந்நிலையில், பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். அமிதாப் பச்சன் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கித் தவித்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி, மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூருக்கு தலா 2 விமானங்கள் என மொத்தம் 6 விமானங்களில் 1,547 தொழிலாளர்களை அழைத்துச்செல்ல அமிதாப் பச்சன் ஏற்பாடு செய்துள்ளார். இதில் நேற்று விமானங்கள் மூலம் தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் இன்று (11) விமானங்களில் சொந்த ஊர்களுக்கு பயணிக்க உள்ளனர். கடந்த மாதம் மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்க அமிதாப் பச்சன் 10 பஸ்களை ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.