ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த பின்னர் நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்படவில்லை: பாதுகாப்பு செயலாளர்

by Bella Dalima 11-06-2020 | 7:47 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க நீர்த்தாரைப் பிரயோகமோ கண்ணீர்ப்புகை பிரயோகமோ மேற்கொள்ளப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன குறிப்பிட்டார். ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முதலாவது பேரணியை பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்த போது, அவர்களைத் தடுக்க வேண்டாம் என ஜனாதிபதி கூறியதால், வழமையாக லோட்டஸ் சுற்றுவட்டத்தில் நிறுத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணிகள் அன்றிலிருந்து ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயில் வரை முன்னெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன கூறினார். மேலும், வீதியில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதால், ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு தௌிவுபடுத்தி அவர்களை ஆர்ப்பாட்டப் பகுதிக்கு அனுப்புமாறு ஜனாதிபதி பணித்ததாக பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார். ஆர்ப்பாட்டப் பகுதியில் தற்போதும் இரண்டு பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு ஆர்ப்பாட்டம் செய்வதை யாரும் தடுக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் வந்திருந்த இடத்தில் பொலிஸார் செயற்பட்ட விதம் சரியில்லையல்லவா என ஒரு செய்தியாளர் கேட்டார். ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஒரு தரமேனும் நீர்த்தாரை திறக்கப்படவில்லை என கூறினேன். கண்ணீர்ப் புகையும் பயன்படுத்தப்படவில்லை. யாரும் மண்டையை உடைத்துக்கொண்டு இரத்தத்தோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை. அத்தகைய ஜனநாயகத்தை ஏற்படுத்தியுள்ள எமது தலைமைத்துவம் மீது சில நிகழ்ச்சி நிரல்களின் தொடர்ச்சியாக ஒடுக்குமுறை, இராணுவமயமாக்கல் செய்வதாக குற்றம் சுமத்துகின்றனர்
என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மேலும் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்விடயங்களைக் கூறினார்.