இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் தாக்குதலில் உயிரிழப்பு

by Staff Writer 11-06-2020 | 9:20 AM
Colombo (News 1st) மிரிஹான பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில், இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன உயிரிழந்துள்ளார். மிரிஹானயிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில், முச்சக்கரவண்டி ஒன்றை விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, நேற்று (10) மாலை அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 53 வயதான சுனில் ஜயவர்தனவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்க உறுப்பினர் ஒருவரின் முச்சக்கரவண்டி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (11) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.