அக்கராயன் வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்ற எதிர்ப்பு

by Staff Writer 11-06-2020 | 6:56 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - அக்கராயன் பிரதேச வைத்தியசாலையை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. அக்கராயன் வைத்தியசாலையை கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தும் வைத்தியசாலையாக மாற்றுவதற்கு குறித்த பிரதேசவாசிகள் எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர். அக்கராயன் பிரதேசத்தைச் சேர்ந்த 15 அமைப்புகள் இது தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவியபோது, அவர் பின்வருமாறு தெரிவித்தார்
கிளிநொச்சியில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக வட மாகாணத்தில் சில வைத்தியசாலைகள் மேலதிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் உள்ள வைத்தியசாலையும் அதில் ஒன்றாக உள்ளது. உடனடியாக அக்கராயன் வைத்தியசாலையை இயக்குவதற்கு வட மாகாண பணிப்பாளரால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். 15 அமைப்புகள் மகஜரை சமர்ப்பித்துள்ளன. அதனை உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைப்பேன்.