முன்னிலை சோசலிசக் கட்சி உறுப்பினர்களுக்கு பிணை

முன்னிலை சோசலிசக் கட்சி உறுப்பினர்கள் 53 பேருக்கு பிணை

by Staff Writer 10-06-2020 | 9:06 AM
Colombo (News 1st) கொள்ளுப்பிட்டி மற்றும் லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிச கட்சியின் செயற்பாட்டாளர்கள் 53 பேருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். சந்தேகநபர்களை துறைமுக பொலிஸார் நேற்றிரவு, நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஜோர்ஜ் ப்ளொய்டின் கொலை உள்ளிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சியினர் கொழும்பில் முன்னெடுக்கவிருந்த போராட்டம் பொலிஸாரின் தலையீட்டினால் கலைக்கப்பட்டதுடன் இவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று மதியம் கொள்ளுப்பிட்டி மற்றும் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகாமையில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட முயன்றதுடன் பொலிஸார் தலையிட்டு இடைநிறுத்தினர். இதன்போது முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ மற்றும் குமார் குணரட்ணம் உள்ளிட்ட 53 செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க தூதரகம் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் போராட்டம் நடத்த தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.