பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை... 

பூசா சிறைச்சாலையில் விசேட சோதனை; 3 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றல்

by Staff Writer 10-06-2020 | 9:46 AM
Colombo (News 1st) பூசா சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கொஸ்கொட தாரக்க, கௌத்தம், சூசை மற்றும் ஜோர்ஜ் உள்ளிட்ட கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக் கூடங்களில் இருந்து இந்த கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வெலேசுதாவின் சிறைக்கூடத்தில் இருந்து சிம் அட்டையொன்றையும் சிறைச்சாலைகள் அதிகாரிகள் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட தொலைபேசி மற்றும் சிம் அட்டை என்பனவற்றை பகுப்பாய்வுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பூசா சிறைச்சாலை அத்தியட்சகரின் விசேட குழுவொன்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.