தமிழகத்தில் இலங்கையர்கள் சிலர் உண்ணாவிரதம்

தமிழகத்தில் சிறப்பு அகதிகள் முகாமிலுள்ள இலங்கையர்கள் உண்ணாவிரதம்

by Staff Writer 10-06-2020 | 9:16 PM
Colombo (News 1st) தமிழகம் - திருச்சி சிறப்பு அகதிகள் முகாமிலுள்ள இலங்கையர்கள் உள்ளிட்டோர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் செயற்படும் சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் 54 பேர் உட்பட 90 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு முகாம் சிறைச்சாலை போல் இல்லாமல் அனைத்து வசதிகளையும் கொண்ட விடுதி போல் இருப்பதுடன், 24 மணிநேர பாதுகாப்பும் உள்ளது. வழக்குகள் முடிந்த வெளிநாட்டவர்களே இங்கு அடைக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் அவ்வப்போது தம்மை விடுதலை செய்யக்கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இங்குள்ளவர்களில் 19 பேர் கடந்த நவம்பர் மாதம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் பின்னர் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். அதன் பிறகு, அரச தரப்பினர் முகாமிலுள்ள அகதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர். எனினும், 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் சிறப்பு அகதிகள் முகாமிலுள்ளவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் இருப்பவர்களுடன் உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை. இதனால் இரண்டாவது நாளாகவும் இலங்கையர்கள் உள்ளிட்டோரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது.